மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிப் பாடிய கவிதை ஒன்று இந்துக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. திரிஷாவும் கமலும் கவிதையை படிக்க, படிப்பதற்கேற்ப பின்னணியில் இசை சேர்க்கப்பட்டிருக்கும். இந்தத் தமிழ்க் கவிதையை அழுத்தம் திருத்தமாக உச்சரிக்க திரிஷாவின் மெனக்கெடல் ரொம்ப அதிகமாம். ஆனால் இந்தப் பாடல் படத்தில் இல்லை என கமல்ஹாசன் இப்போது சொல்லியிருக்கிறார்.
கடற்கரை தோறும் காலையும் மாலையும்
தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்...
முற்றும் துறந்து மங்கையரோடு
அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்... என்ற வரிகள் கவிதையில் இடம் பெற்றிருப்பதும்
ஸ்ரீ வரலட்சுமி நமஸ்துதே! என்று சொல்லி கவிதையை முடித்திருப்பதாலும் இந்து அமைப்புகள் இந்தப் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தப் பாடல் படத்தில் இடம்பெறக் கூடாது என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்தப் பாடலில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று சென்சார் போர்டும் சொல்லிவிட்டது. இருந்தாலும் படத்தில் இருந்து பாடலை நீக்குவது என முடிவு செய்திருக்கிறார் கமல். அதற்கு காரணம் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.
இது பற்றி அவர் தெரிவித்திருப்பது...
என் இனிய ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம்,
மன்மதன் அம்பு சினிமா படத்தில் நான் எழுதிப் பாடிய பாடல் ஒன்று இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக வந்த செய்தி பரவலாக கிளம்பியதை நான் அறிவேன். இதை தணிக்கை செய்த குழு இப்பாடலில் புண்படுத்தக் கூடிய வரிகள் எதுவும் இல்லாததால் அதை அனுமதித்தனர். தொலைக்காட்சியிலும் மும்முறை ஒலிபரப்பப்பட்டு வரவேற்பை பெற்றப் பாடல். இதுவே எனது நிறுவனமாக இருந்தால் கண்டிப்பாய் அந்த வரிகளை நிஜ ஆன்மீக வாதிகளை புண்படுத்தாது என்ற நம்பிக்கையுடன், சென்சார் சான்றிதழ் சகிதம் வெளியிட்டிருப்பேன். இது ரெட் ஜெயன்ட் மூவிஸ் படம். திரு.உதயநிதி ஸ்டாலின் படம் என்பதாலும், எல்லோரும், எம்மதத்தவரும் படம் காண வர வேண்டும் என்ற எண்ணத்தில், பல கோடி பேர் ஏற்கெனவே பார்த்து ரசித்த பாடலாக இருந்த போதிலும் இப்பாடல் காட்சியை நாங்களே முன் வந்து நீக்குகிறோம்.
என் குடும்பத்தில் வைணவரும், சைவரும், இஸ்லாமியரும், கிருத்துவரும் இருக்கின்றனர். அவர்களில் பலர் என்னைப்போல் அல்ல, தெய்வ விசுவாசிகள். நான் பகுத்தறிவு வாதி அது அவ்வாறாகவே இருந்து வருகிறது அதுவாகவே திகழும்.
மன்மதன் அம்பு வியாபாரம். அதுவும் மற்றவர் செய்யும் வியாபாரம். இதில் நான் வெறும் கலை ஊழியன் மட்டுமே. அரசியல் வாதிகளின் இடையூறு எனக்கு புதிதல்ல. மதமும், அரசியலும் கலந்த இந்தச் சிக்கலில் நல் ரசிகன் பலியாகாதிருக்கவும், அனைவரும் கண்டு ரசிக்கவும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது. மற்றபடி பகுத்தறியும் பாடலில் என் தேடல் தொடரும். அதில் மக்கள் அன்பிற்கும் நிறைய இடம் உண்டு.
No comments:
Post a Comment