Thursday, December 23, 2010

திருப்பி அடிப்பேன்! - சீமான் பாகம் 03



'சிறையில் எப்படி அண்ணா இத்தனை நாள் இருந்தீர்கள்?’ - தம்பிகள் பலரும் தவிப்போடு கேட்கிறார்கள். என் சிறைக்குக் கூரை இருந்தது. நான்கு புறமும் சுவர்கள் இருந்தன. கழிவறை இருந்தது. மூன்று வேளைகளும் சாப்பாடு வந்தது தம்பிகளே!

ஆனால், எந்தத் திசையிலும் தடுப்பு இல்லாமல், கால் நீட்டி அமரக்கூட நிலம் இல்லாமல் மழை யிலும், குளிரிலும் தத்தளித்தபடி முள்வேலிக்குள் முடக்கப்பட்டுக்கிடக்கும் என் உறவுகளின் நிலையை ஒப்பிட்டால், என் சிறை வலி... ஒரு விஷயமே இல்லை.

சிறையில் இருந்து மீள்வதற்கு சில நாட்களுக்கு முன்புதான் தாங்க முடியாத துயரத்தில் தள்ளும் விதமான செய்தியை தம்பி ஒருவன் சொன்னான்.

இசைப் பிரியா கற்பழித்துக் கொல்லப்பட்ட காட்சிகளை சேனல் 4 ஒளிபரப்பி இருக்கிறதாம் அண்ணா! நெஞ்சு நடுங்கவைக்கும் அந்தக் கொடூரத்தைப் பார்த்துவிட்டு, லண்டன், கனடா, நார்வே நாடுகளில் கடுமையான கொந்தளிப்பாம். போர்க் குற்றவாளியாக ராஜபக்ஷேவை அறிவிக்கக் கோரி உலக நாடுகள் பலவும் கண்டனம் எழுப்பி இருக்கின்றனவாம்!'' என்றான்.

அடுத்த சில நிமிடங்களிலேயே சமாதானப் பிரிவைச் சேர்ந்த ரமேஷ் கொல்லப்பட்ட காட்சிகளும் ஒளிபரப்பாவதாக எனக்குச் சொல்லப்பட்டது.

மனதளவில் நான் சோர்ந்து சுருண்டு போனேன். அடுத்த இரண்டாவது நாளில்என் மீதான வழக்கு உடைக்கப்பட்டதாக தாங்க முடியாத மகிழ்ச்சியுடன் தகவல் சொன்னார்கள். ஆனால், உண்மையில் எனக்கு எவ்வித மகிழ்ச்சியும் இல்லை. வெளியே வரவே வெட்கமாக இருந்தது.

இசைப்பிரியா சீரழிக்கப்பட்டார்... ரமேஷ் கொல்லப்பட்டார்... என்பதெல்லாம் பலருக்கும் ஒரு செய்தியாகவே இருக்கும். ஆனால், எனக்கு அது என் வீட்டில் விழுந்த இழவுக்குச் சமம். என் மனக் கண்ணில் இசைப்பிரியா சிரிக்கிறாள்... ஈழத்தில் நான் இசைப்பிரியாவுடன் உரையாடிய நிகழ்வுகள் நெஞ்சுக்குள் வந்து போகின்றன.

இசைப்பிரியா... ஈழத்து உயிரோவியம். அவள் பேசுவதே கவிதை வாசிப்பதுபோல் இருக்கும். அழகுத் தமிழில் என்னை அவள் நேர்காணல் எடுத்த நிகழ்வு, ஏதோ இன்றைக்கு நடந்ததைப்போல் இருக்கிறது. புலிகளின் 'நிதர்சனம்’ தொலைக்காட்சிக்காக இசைப் பிரியா கேள்வி கேட்க... நான் பதில் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, 'அண்ணா கிபீர் வரும் சத்தம்...’ என என்னை அடுத்த இடத்துக்குத் தூக்கிக்கொண்டு போவார்கள். பின்னர், ஆசுவாச நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் பேட்டி தொடரும். நான்கைந்து நிமிடங்களுக்கு மேல் ஓர் இடத்தில் நின்று பேச முடியாது. எந்நேரமும் குண்டு விழும் என்கிற அபாயச் சூழலிலும், புன்னகை மாறாத முகத்தோடு இசைப்பிரியா, ஈழம் குறித்தும் தமிழகம் குறித்தும் நிறைய உரையாடினாள்.

ஈழப் போரின் இறுதிக்கட்ட நேரத்தில் யார் யாருக்கு என்ன நேர்ந்ததோ எனப் பதற்றத்தோடு நான் பட்டியலிட்டுப் பார்த்தவர்களில் இசைப்பிரியாவும் ஒருவர். போர் முடிந்த சில மாதங்களில், 'பிரபாகரன் மகள் துவாரகா கொல்லப் பட்டதாக’ சில ஊடகங்கள் இசைப் பிரியாவின் புகைப்படத்தை வெளியிட்டன.

கொல்லப்பட்டது இசைப் பிரியாதான்... துவாரகா இல்லை!’ என அடுத்த சில நாட்களிலேயே வெளியான உண்மை, தடதடத்த தமிழ் இதயங்களை தைரியம் கொள்ளவைத்தது. ஆனால், அன்றைக்கும் இந்த சீமான் இருந்தது அழுகையோடுதான்! சிறை வாசலில் திரண்ட கூட்டம்... ஆவேச முழக்கம்... ஆதரவுக் கரங்கள்... வழி நெடுக வரவேற்பு... இத்தனைக்கு மத்தியிலும் இசைப்பிரியாவின் துயரம் என் நெஞ்சைத் துளைத்துக்கொண்டே இருந்தது. அதேபோல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட ரமேஷின் மரணமும்!

போராளிகளின் கட்டளைத் தளபதியாக இருந்த ரமேஷ், அங்கே பெருமரியாதையோடு பார்க்கப்பட்டவர். கண்ணியில் சிக்கிய காடைக் குருவியாய் சிங்களப் பிடியில் சிக்கிய அவருடைய கோலத்தை இணையதளத்தில் கண்டு சுக்குநூறாகிப் போனேன். கொன்றார்களா... வெறி பிடித்துத் தின்றார்களா என்றே தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்ட இசைப்பிரியாவின் இறுதி நிமிடங்களைக் கண்டித்து எழுதக்கூட என் கைகள் நடுங்குகின்றன.

ராஜபக்ஷவுக்கு எதிராகப் போர்க் குற்ற விசாரணையை நோர்வே நடத்தச் சொல்கிறது... கனடா கண்டிக்கிறது... லண்டன், ராஜபக்ஷவை வளைக்கிறது... சுவிட்சர்லாந்து, கண்டனமும் போராட்டமுமாகக் கொந்தளிக்கிறது. ஆனால், என் தாய்த் தமிழ் உறவுகள் வாழும் தமிழ்நாடு மட்டும் எந்தச் சலனமும் இல்லாமல் கிடக்கிறது!

ஒரு குரல் இல்லை... ஒரு கூப்பாடு இல்லை... முதல் தமிழனாக அலறி இருக்க வேண்டிய எங்கள் தமிழினத் தலைவரோ, 'இளைஞன்’ திரைப்பட விழாவில் நமீதாவின் வணக்கத்துக்கு நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறார். தன் மகளாக எண்ணக்கூடிய தளிர் ஒன்றை சிங்கள வல்லூறுகள் சிதைத்துப்போட்ட கோலத்தை எங்களின் தமிழினத் தலைவரிடம் எடுத்துச் சொல்லக்கூட இங்கே ஆள் இல்லை!

அப்படியே சொல்லி இருந்தாலும் என்ன செய்துவிடப் போகிறார்..? 'எடுங்கப்பா ஒரு கடுதாசியை...’ எனச் சொல்லி கடமைக்காக ஒரு கடிதம் எழுதி இருப்பார். ஈழமே இழவுக்காடாகிக் கிடந்த வேளையிலும் அரை நாள் உண்ணாவிரதம் இருந்து அசத்திய தமிழ் மகனிடம், எங்களுக்கான குரலை இன்னமும் எதிர்பார்த்துக் காத்திருப்பது தவறுதான்.

ஆனால், பிணத்தைப் புணர்ந்து இனத்தை ஈனப்படுத்தும் சிங்கள வெறியாட்டங்களாவது, பாசத் தலைவனின் மனதைக் கொஞ்சமேனும் பதறவைக்காதா என்று ஒரு நப்பாசை! இருக்கட்டும், காலம் இப்படியே போய்விடாது. ஈழத்துக் கண்ணீரை இன்னமும் கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழினத் தலைவனின் பாராமுகத்துக்குப் பதில் தேடும் காலம் நெருங்கிவிட்டதாகவே நினைக்கிறேன்.

இன்றைக்கு பத்திரிகைகளைப் புரட்டினாலே உங்களின் குடும்ப பராக்கிரமங்கள்தான் கொடி கட்டிப் பறக்கின்றன. மகனை, மகள் திட்டுகிறார். மகளை, பேரன் திட்டுகிறார். இருவரும் உங்களையே 'இயலாதவராக’ விமர்சிக்கிறார்கள். எல்லோருடைய உரையாடல் பதிவுகளும் வெளியாகி, தமிழினத் தலைவராகிய உங்களைத் தத்தளிக்க வைக்கின்றன. அங்கே... இங்கே... என அத்தனை இடங்களிலும் சோதனை நடத்திய மத்தியப் புலனாய்வுத் துறை, அடுத்தபடியாக உங்களின் சி.ஐ.டி. காலனி வீட்டில் நுழைந்தாலும் ஆச்சர்யம் இல்லை என்கிறார்கள். இத்தனை வயதில், 'பதவிகள் நிலைக்குமா... கூட்டணி நீடிக்குமா?’ என ஒவ்வொரு நிமிடமும் உறக்கம் இன்றித் தவிக்கிறீர்களாமே?

உலகத் தமிழர்களின் கண்ணீர்தான் உங்களின் நிம்மதியைக் காவு வாங்கி இருக்கும் என்பது என் அழுத்தமான அனுமானம். இலவசத் தொலைக்காட்சி, ஒரு ரூபாய்க்கு அரிசி என மக்களை சோம்பேறிகளாக்கி, அதைவைத்தே மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என நம்பிக்கையோடு இருந்த நீங்கள்... இன்னும் சில இலவசத் திட்டங்களுக்கு புத்தியைத் தீட்டிக்கொண்டு இருந்தீர்கள். ஆனால், வெண்ணெய் திரண்ட நேரத்தில் தாழி உடைந்த கதையாக, ஸ்பெக்ட்ரம் விவகாரம் இன்றைக்கு சந்தி சிரிக்கிறது.

போரை வழிநடத்துவதே இந்திய இராணுவம்தான்!’ எனச் சொல்லி காங்கிரஸை நாங்கள் கண்டிக்கச் சொன்னபோது, மந்திரிப் பதவிகளை தூக்கி வீசிவிட்டு நீங்கள் வந்திருக்க வேண்டும். நியாயமான மனிதராக - நெஞ்சுரம்கொண்ட தமிழராக இல்லாத நீங்கள், அன்றைக்கு அந்த அற்பப் பதவிகளைத் தூக்கி வீச அஞ்சினீர்களே... இன்றைக்கு காங்கிரஸின் நிர்ப்பந்தமே அதிமுக்கியப் பதவியாக - பணம் காய்க்கும் மரமாக நீங்கள் நினைத்த தகவல் தொடர்புத் துறையைத் தட்டிப் பறித்துவிட்டதே... அது ஈழத்துப் பாவத்தால் நிகழ்ந்திருக்காது என்பது என்ன நிச்சயம்? பதவியை இழந்ததற்கே இப்படிப் பதறுகிறீர்களே... உயிரை இழந்தவர்களின் வலி உங்களுக்கு ஏனய்யா புரியாமல் போய்விட்டது?

இது ஆரம்பம்தான்... நீங்கள் எதற்காக ஈழத் துயரத்தைக் கண்டிக்காமல் கை கட்டி, வாய் பொத்தி, 'ஆமாம் சாமி’யாக இருந்தீர்களோ... அவை அத்தனையும் காங்கிரஸின் இக்கட்டுகளால் உங்களின் கைகளைவிட்டுப் போகும் பாருங்கள். கோபமாக இதனை நான் சொல்லவில்லை. உங்களின் பாராமுகத்தால் பலியான ஆயிரமாயிரம் உயிர்களின் சாபமாகச் சொல்கிறேன்!

ராஜ தந்திரங்களின் தகப்பனாக - சாதுர்யச் சிறுத்தையாக - அரசியல் நெளிவுசுளிவுகளை ஆகக் கற்றவராக வலம் வந்த நீங்கள், இன்றைக்கு ஸ்பெக்ட்ரம் சர்ச்சையில் நிலை குலைந்தவராக - நிம்மதி இழந்தவராக - நெருக்கடி சூழ்ந்தவராக இருக்கிற நிலையைச் சுட்டிக்காட்டிச் சொல்கிறேன்... தமிழினத்தின் வீரத்தை உலகத்துக்கே பறைசாற்றி புலித் தலைவனாய் தீரம் காட்டிய பிரபாகரன் எங்கே... ஊழலில் எப்படி சாதனை படைப்பது என உலகையே திகைக்கவைத்துப் பழித் தலைவனாய் பட்டம் வாங்கி இருக்கும் நீங்கள் எங்கே..?!

திருப்பி அடிப்பேன்

2 comments:

Unknown said...

அண்ணனின் அருமையான பதிவை பதிவு செய்ததற்கு நன்றி . தொடரட்டும் உங்கள் பணி

உங்களுள் ஒருவன் said...

நன்றி நணபர........

Post a Comment