Monday, February 28, 2011

''சிங்களவருடன் எங்களை சமாதானமாக வாழச் சொல்​பவர்கள், இதற்குச் சரியான பதில் சொல்வார்களா?'' திருப்பி அடிப்பேன்!: 19

பார்வதி அம்மாளின் அஸ்தி மீது நாய்களை எரித்து.. இறந்த பின்பும் அவமதிப்பு'' இப்படியும் நடந்து​கொள்​ளுமா மனித ஜென்மங்கள்?'' எனும் அளவுக்கு, மீண்டும் ஒரு முறை கோர முகம் காட்டி இருக்கிறது சிங்களப் பேரின​வாதம்!

சொந்த ஊரான வல்வெட்டித்​துறையில் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தகனம் செய்யப்பட்ட இடத்தில், அதே இரவில்... சில நாய்களை அரைகுறையாக எரித்துப் போட்டுவிட்டு, அஸ்தியையும் சிதறடித்துச் சென்றுள்ளன, மனித உருவில் வந்த சில மிருகங்கள்!
பொதுமக்கள் அஞ்சலிக்காக, பார்வதி அம்மாளின் உடல் வைக்கப்பட்டு இருந்த இடமே சிங்கள ராணுவத்துக்குப் பிரச்னைதான். பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை இறந்தபோதும், இந்த இடத்தில்தான் அவரது உடல் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது. இந்த சதுக்கத்தில்தான் குமரப்பா, புலேந்திரன் உள்பட்ட 12 புலிப் போராளிகளுக்கும் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அவர்களின் நினைவாக பன்னிரு போராளிகள் நினைவுத் தூண் அமைக்கப்பட்டது. போராளித் தளபதி கிட்டுவின் நினைவாக ஒரு கப்பல் நினைவுச் சின்னமும் இங்கு அமைக்கப்பட்டது. ஏராளமான மக்கள் கடந்த கால நினைவுகளை மனதில் போற்றிய அந்தச் சின்னங்களும் சிங்களப் படையால் இடிக்கப்பட்டன.





இப்படிப்பட்ட இடத்தில், 'பார்வதி அம்மா​ளுக்கு இறுதி மரியாதை செலுத்த, தமிழ் மக்கள் திரண்டுவிடக் கூடாது’ என்பதில் சிங்கள ராணுவம் மூர்க்கத்துடன் வல்வெட்டித்துறையில் குவிக்கப்பட்டது. தீருவில் சதுக்கத்தை நோக்கிய சாலைகளில் சென்ற அனைவரையும் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் திருப்பி அனுப்பினர். இரங்கல் தெரிவிக்கக் கட்டப்பட்ட கறுப்புக் கொடிகளை அகற்றுமாறு துப்பாக்கி முனையில் மிரட்டினர். அடைக்கப்பட்ட கடைகளை திறக்குமாறும் கட்டாயப்படுத்தினர். ஆனால், கொந்தளித்து நின்ற வல்வெட்டித்துறை மக்களிடம் அவர்களின் பாச்சா பலிக்கவில்லை. இளையவர்கள், முதியவர்கள், ஊனம் அடைந்தவர்​கள்கூட இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

அடுத்து, யாழ் பல்கலைக்​கழக மாணவர்களைப் பங்கேற்க​விடாமல் தடுக்க முயற்சித்தது சிங்கள அரசு. பல்கலைக்கழகம் உள்ள திருநெல்வேலியில் இருந்து 22 கி.மீ. தொலைவு கடந்து இறுதி நிகழ்வில் பங்கேற்பதற்காக, மாணவர்கள் பேருந்து​களில் புறப்பட இருந்தனர். அவர்களை உள்ளூர் போலீஸார் மிரட்டினர். தனியார் பேருந்து உரிமையாளர்​களையும் மிரட்டினர். ஆனாலும் தடைகளை மீறி 2,000 பேர் இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், புலிகள் ஆதரவு தமிழ்த் தேசிய மக்கள் முன்ன​ணியின் தலைவர்கள் எனப் பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.

முன்னதாக காலை 10.30 மணிக்கு தீருவில் சதுக்கத்தில், டாக்டர் மயிலேறும் பெருமாள் தலைமையில் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து பழ.நெடுமாறன், வைகோ, உணர்ச்சிக் கவிஞர் காசி​ஆனந்தன், சீமான், நார்வே நாட்டில் இருந்து ஈழத் தமிழர் அவையின் பிரதிநிதியான விஜய் அசோகன் ஆகியோர் தொலை​பேசி மூலம் அஞ்சலி உரை நிகழ்த்​தினர்.
உள்ளூர்த் தலைவர்கள் பேசிய பிறகு, ஆலடி ஒழுங்கை எனும் இடத்தில் உள்ள பிரபாகரனின் மூத்த அக்காள் ஜெகதீஸ்வரியின் வீட்டுக்கு பார்வதி அம்மாளின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. பிற்பகல் 2.45 மணி முதல் மாலை 4.30 மணிவரை சைவ முறைப்படி இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. யாழ்ப்பாண வழக்கபடி, வேலுப்பிள்ளையின் ஒன்றுவிட்ட தம்பியான சங்கரநாராயணன் இறுதிக் கிரியைகளைச் செய்தார்.

வல்வெட்டித்துறை கடற்கரையில் உள்ள ஊறணி மயானத்தில் பார்வதி அம்மாளின் உடல் தகனம் செய்யப்பட்டது. மறுநாள் காலை கடலில் கரைப்பதற்காக உறவினர்கள் அஸ்தியை எடுக்கச் சென்றனர். அப்போதுதான், அந்த அதிர்ச்சி! அங்கே, பார்வதி அம்மாளின் அஸ்தி எங்கும் சிதறடிக்கப்பட்டு இருந்தது. கூடவே, மூன்று நாய்களின் சடலங்களும் அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் கிடந்திருக்கின்றன. வேறு வழியின்றி அவற்றை கடல் கரையில் புதைத்துவிட்டு, அஸ்தியை எடுத்து வந்துள்ளனர்.

வடக்கு இலங்கை மாகாணத்தின் ஓய்வுபெற்ற கல்வித் துறை அதிகாரியான வல்வை ஆனந்தராஜ் நம்மிடம், ''அம்மாவின் மோசமான கடைசிக் காலத்துக்கு நாங்களும் காரணமாக இருந்துவிட்டோமே என்பது வருத்தம் அளிக்கிறது. சொந்த ஊரில், நம்மவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்தும், மருத்துவமனையில் இருந்த அம்மாவை சிங்கள மக்கள் ஒரு காட்சிப் பொருளைப்​போலத்தானே பார்த்துச் சென்​றார்கள். தமிழ்நாட்டில் உரிய காலத்தில் சிகிச்சை அளிக்க அனுமதி அளித்திருந்தால், அவருக்கு இப்படி எல்லாம் நடந்திருக்குமா? தமிழக உறவுகள் அம்மாவை இப்படி விட்டிருப்பார்களா?'' என்றார் மனத்தாங்கலுடன்.

யாழ்ப்பாண முன்னாள் எம்.பி-யான சிவாஜிலிங்கம், ''அம்மாவின் உடலை விதைக்கலாம் என சிலர் என்னிடம் சொன்னார்கள். அதை வன்மையாக மறுத்தேன். அவர்களுக்குக் காரணம் புரியவில்லை. ஞாயிறு, திங்கள் இரு நாள்களும் இரவு முழுவதும் அம்மாவின் உடல் அருகிலேயே இருந்தோம். ஆனாலும் சிதையின் மீது ஒரு காட்டிமிராண்டித்தனத்தை செய்திருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது, இங்கே எப்படி இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் வரும்?'' என்று கோபப்பட்டார்.

''சிங்களவருடன் எங்களை சமாதானமாக வாழச் சொல்​பவர்கள், இதற்குச் சரியான பதில் சொல்வார்களா?'' என்ற ஈழத் தமிழர்களின் கேள்வி நெஞ்சில் அறைகிறது!


ஜூனியர் விகடன்

5 comments:

eraeravi said...

மதுரையில் செந்தமிழன் சீமானின் எழுச்சி உரை மிகச்
சிறப்பாக இருந்தது .மாநாடு போல நடந்தது .மக்கள்
வெள்ளம் திரண்டு இருந்தார்கள்

நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_23.html

பார்வதியம்மாளுக்கு வீரவணக்கம் அவசியமா ?

eraeravi said...

http://eluthu.com/user/index.php?user=eraeravi

உங்களுள் ஒருவன் said...

நன்றி ரவி அவர்களே.........

உங்களுள் ஒருவன் said...

ஐயா நிலவு அவர்களே..... உங்களுது பதிவில் என்னக்கு உடன்பாடு இல்லை.... உங்கள் பதிவில் என்னது கருத்துகளை பின்னோடோம் இட்டு உள்ளன்..... அதை பார்த்து விட்டு உங்களது கருத்தை தெரயுங்கள்.....

Post a Comment